Tuesday, September 11, 2007

மறந்து பிரிவோம்

இறுதியில், முதலாய் யோசித்தேன் -
முடிகின்ற உன்மீதான என் கனவுகளை!

பிரிவது இயல்பு
சேர்ந்தே பிரிவது துயரம்

மறந்து விடுவதாய் நானும் இல்லை
மறக்கச் சொல்வதாய் நீயும் இல்லை
இருந்தும்-
மறந்து பிரிவோம் என்றாய்
மரித்துப் பிரிவோம் எனக்கேட்டது!

கடைசி காலங்களில் -
என் கண்கள் உன்னைத் தேடும்
இதயச் சுவர்களெங்கும் உன் பிம்பம் சிதறும்
வீரம் தாழ்ந்து விழிகள் நீர் பெருக்கும்
வண்ணங்கள் நிறமிழக்கும்
மனச்சோர்வையும் தாண்டி வந்த சிறு தூக்கம்
நடுநிசியில் பறிபோகும்
சவக்கிடங்கெனத் தோன்றும் என் வீட்டில்
பேய்கள் கூடிப்பேசும்
கடிகார முள் கால் உடைந்து தவழ்ந்து போகும்
கூவும் குயில் செவி கிழிக்கும்
வைகறை என்னைச் சுடும்
மார்கழியில் வேர்க்கும்

எல்லாம் -
நீ பிரிந்து போனால்!

No comments: